நாவல் நடை.

நான் சிறுத்தை நடை என்கிற ஒரு சிறுகதையை, தேயிலைத் தோட்டப் பின்னணியில் எழுதினேன்.அப்போது இலங்கையிலிருந்து ஒரு வாசகர் இலங்கையில் காப்பித் தோட்டங்கள்,மற்றும் அவற்றின் வீழ்ச்சியின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல்
பற்றிக் கூறினார்.

Christine Frances Spittle Wilson 1957 ல் எழுதிய இந்த மூல ஆங்கில நாவல் கிடைப்பதில் சிரமம் இருந்தது.மொழிபெயர்ப்பு மட்டுமே கிடைத்தது.இலங்கையைச் சேர்ந்த இரா சடகோபன் சரளமாக மொழிபெயர்த்துள்ளார்.

நாவல் என்று சொன்னாலும் இதில் வருகின்ற பலர் சரித்திரக் கதாபாத்திரங்கள். இலங்கையின் சரித்திரத்தில் முக்கிய பங்கு ஆற்றியவர்கள்.

Out of Africa,Gone with the wind இரண்டையும் நினைவுபடுத்துகிற நாவல்.அவற்றைப் போல ஒரு காலகட்டத்துக்குள் தங்களைக் கவர்ந்திழுத்திக்கொள்ளும் நாவல் கூட.காப்பித் தோட்டங்களின் வளர்ச்சி,தேய்வுடன் தனி மனிதர்களின் விடா முயற்சி, நம்பிக்கை இழப்பு,மீட்டெடுப்பு,ஆண் பெண் உறவுகளுக்கிடையான சிக்கல்கள்,இனங்களுக்கிடையேயான சிக்கல்கள்,இயற்கையுடனான மனிதனின் நீண்ட போராட்டம் எல்லாவற்றையும் பேசும் ஒரு செவ்வியல் நாவல் இது.

செவ்வியல் படைப்புகளின் தன்மைகளுள் ஒன்று நாம் அவற்றின் கதாபாத்திரங்களின் வாழ்வுடன் ஒன்றிப்போய்விடுவதுதான்.பின் நவீனத்துவம் இந்த ஒன்றிப்போதலை ஒரு மயக்கம் என்று கருதி உடைக்க முயற்சி செய்தது.நாடகத்தின் நடுவிலேயே வந்து இது நாடகம்தான் என்று கத்துகிற நடிகர்,கதைக்குள் நடுவில் வந்து உளற ஆரம்பித்துவிடுகிற எழுத்தாளர் என்று பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.நாவல்கள் என்பவை ஒரு நீண்ட கனவு (continuous dream)போல் இருக்கவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடுண்டு.அல்லது ஒரு இணைவாழ்வைப் போல.

இந்த நாவலின் மையபாத்திரங்களான சாரா,டொம்,ஹியூ இவர்களுடன் மட்டுமல்லாமல் டேவிட்,அலிசன்,,லீலா போன்ற துணைப் பாத்திரங்களுடனும் நாம் ஒன்றிப்போக முடிகிறது என்பதே நாவலின் வெற்றி.

இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் சூழலில் அதன் காப்பித் தோட்ட வரலாற்றையும் தெரிந்துகொள்வது தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

வெள்ளையர்கள் இலங்கையின் வளங்களைச் சுரண்டியவர்கள்.அதே நேரம் அவர்களே இலங்கையின் பொருளாதாரக் கட்டுமானங்களையும் உருவாக்கியவர்கள் என்று நூலுக்கு முன்னுரை தந்திருக்கும் தெளிவத்தை ஜோசப் குறிப்பிடுகிறார்.

இதை நாவலில் ஒரு கதாபாத்திரமே சொல்கிறது.

"நமக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்.நாளையே இவர்கள் நாம் சுரண்டல்காரர்கள் என்று பொன்னெழுத்துகளால் பொறித்துவைக்கலாம்"


Comments